ஞாயிறு, மார்ச் 06, 2011

எப்போதும் ...!

இப்போதெல்லாம்
நான் மட்டுமே
உட்கார்ந்திருக்கிறேன்
இரவு நேரத்தில்
இந்த பேருந்து நிறுத்தத்தில்.

       என்னைக்கடந்து
       எனக்கான கடைசிப்பேருந்தும்
       கடந்த நிலையில்
       நான் மட்டும் ஏதோ
       வேலை இருப்பது போல்
       அமர்ந்திருக்கிறேன்.

அந்த நேரத்திலும்
பழைய சம்பவம்
எதையோ நினைத்து
அடிக்கடி சத்தமாய்
சிரித்துக்கொள்கிறேன்
அருகில் அரை வெளிச்சத்தில்
யாருமே இல்லாத தைரியத்தில்.

            எத்தனையோ இடங்கள்
           அமர்ந்து பேசுவதற்கு இருந்தாலும்
           ஏனோ எதனாலோ
           எனக்கும் கண்ணபிரானுக்கும்
           ஏற்ற இடம் இந்த பேருந்து
           நிறுத்தமாகவே அமைந்து விட்டது.



எத்தனையோ நாள்
எத்தனையோ நேரம்
எங்கள் பேச்சுக்களை
காதுகொடுத்துக்கேட்டிருக்கும்
இந்த உயிரில்லாத
சலவைக்கல்லும் இரும்புத்தூண்களும் .

         இப்போதெல்லாம் நேரமின்மையால்
         எப்போதாவது வருவான்
         எனக்கு சிரிப்பு வருவதைப்போல.

எப்போதும் நான்
தனியனாக உணர்ந்ததே இல்லை
'எல்லோரும் எப்போதும் என்னோடு'
என்றே நினைத்து வந்தேன்
எல்லோருக்கும் வேலை கிடைக்கும் வரை.

      இதோ இன்று
      எனக்கான பேருந்தும்
      கடந்த நிலையில் நான் மட்டும்
      யாருக்காகவோ எவருக்காகவோ
      காத்திருக்கிறேன் பழக்கத்தில் - அவள்
      மட்டுமாவது என்னோடு
      கடைசி வரை இருப்பாளென்று.

என் தோழியாகவாவது
வந்திருப்பாள் - அவளுக்கு மட்டும்
மனைவி என்னும்
வேலை கிடைக்காமல் இருந்திருந்தால்.

        எனக்குத்துணையே இல்லை
       என்ற உண்மை உறைத்தபிறகும்
        இன்னும் யாருக்காகவோ
        எதற்காகவோ இந்த கும்மிருட்டில்
        எனக்கான கடைசிப்பேருந்தும்
        கடந்த நிலையில்
        எதையோ நினைத்துக்காத்திருக்கிறேன்
        எதுவோ திரும்பி வருமென்று!


---------------------------------------------------
2004 ஆம் ஆண்டு எழுதியது.





 

கருத்துகள் இல்லை:

வலைப்பதிவு காப்பகம்