வெள்ளி, ஜனவரி 28, 2011

தருணங்களே கவிதைகளாய்...!

23.08.2002
காலை 11:30
_________________________________________________
முட்டையிலிருந்து மெல்ல
உடைத்துக்கொண்டு வெளிவரும்
குஞ்சைப்போல
வார்த்தைகள் ஒன்று சேர்ந்து
உள்ளிருந்து வெளிவரும்
கவிதைக்கான அந்தத்தருணம்...

சங்கிலித்தொடர் மாதிரி
வார்த்தைகள் பிரவகிக்கும் நேரம்
குழந்தையைத்தேடும் தாய் போல
பேனாவைத்தேடும் அந்தத்தருணம்...

தொண்டைக்குள்ளிருக்கும்
வார்த்தைக்குழந்தைகளை
தொட்டிலில் வைத்துத்தாலாட்ட
தொட்டில் தேடி அலையும் 
ஒரு தகப்பன் போல
காகிதத்துக்காய் அலையும் அந்தத்தருணம்...

எல்லாம் தயாராக இருப்பினும்
வார்த்தைகள் தொண்டைக்குள்
சிக்கிய முள்ளாய்...
கருப்பையில் தலைகீழாய்
மாறிப்போன குழந்தை
கொடுக்கும் பிரசவ வலியாய்...
எப்படியோ அது தானாக மாறி
குழந்தைக்கவிதையாய் வெளியே  வந்தபின்
எல்லா வேதனையும் சுகமாய்
மாறிய அந்தத்தாயின் நிலையாய்...
சுகப்ரசவமாய் கவிதையைப்
பார்க்கும் அந்தத்தருணம்...

இப்படி வார்த்தைகளற்ற   தருணங்களே
கவிதையாய் இருக்கும்போது
வார்த்தைகள் அடங்கிய
என் கவிதைக்கு என்ன விலை..?


கருத்துகள் இல்லை:

வலைப்பதிவு காப்பகம்