ஓடி ஓடி உழைத்த ஒரு உயிர். யார் மீது குறை சொன்னாலும் அதை கோபம் வராமல் சொல்லும் பாங்கு. எனக்குத்தெரிந்து வீட்டுக்கு வந்த யாரும் வெறும் வயிற்றோடு சென்றதில்லை. எல்லாருடைய நல்ல விசேஷத்திற்கும் கெட்ட விஷயத்திற்கும் அவர் கட்டாயம் ஆஜராகி விடுவார். அவர் சும்மா உட்கார்ந்து நான் பார்த்ததில்லை. ஏதாவது ஒரு விஷயம் செய்து கொண்டும் பேசிக்கொண்டும் இருப்பார். சொந்தங்களை பார்த்தால் உயிர் ஒழுகும் அந்த பேச்சில் செயலில் ஒரு தீண்டுதலில்.
பெரிய பிரபலமான ஒரு பெண் அல்ல. ஆனால் ஒரு நல்ல தலைமுறையை உருவாக்கியவர். எனக்கு நினைவு தெரிந்து அத்தை வீட்டில்தான் என் விளையாட்டுப்பருவம் ஆரம்பமானது. அங்கேயே முடிந்தும் போனது. அந்த நினைவுகள் இப்போதும் பசுமையாய் என் நெஞ்சில் இருக்கிறது. அங்கே மனித உறவுகளை புரிந்து கொண்டேன் . மரியாதையை கற்றுக்கொண்டேன்.எப்படி சாப்பிட வேண்டும் என்று தெரிந்து கொண்டேன். என் பல "முதல்" கள் இங்கே தான் ஆரம்பமானது . என் முதல் கட்டுரை அங்கேதான் உதயமானது . பல கவிதைகள் அங்கே அரங்கேற்றம் கண்டிருக்கின்றன . இன்னும் என் நெஞ்சில் இருப்பது என் கிராமமும் அத்தை வீட்டில் வாழ்ந்ததும்தான்!
என் எழுத்துக்களின் ஊற்றுக்கண் இங்கிருந்துதான்!
அத்தைக்கு அவர் அண்ணன்(எங்கள் அப்பா) என்றால் உயிர். அந்தக்காலங்களில் எங்கள் அப்பா அதை வீட்டிற்கு சென்றால் நேரம் போவதே தெரியாமல் பேசிக்கொண்டிருப்போம். தினம் இரவு இரண்டு அல்லது மூன்று மணி தாண்டிவிடும். அது ஒரு காலம் ! இப்போது அப்படி ஒரு உறவுசூழலை உருவாக்க முடியுமா என்று தெரியவில்லை. எல்லாரும் தனித்தனி தீவாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்! அதை நினைக்கும் போது தான் இன்னும் அந்தக்கலங்களில் கொஞ்ச நேரம் இந்த வாழ் நாளை கழித்திருக்கலாம் என்று எண்ணத்தோன்றுகிறது .
கடைசி நேரத்தில் யாருக்கும் தொல்லை கொடுக்காமல் அதிகாலையில் உறவுக்கெல்லாம் உழைத்த ஒரு நல்ல உள்ளம் இந்த உலக இயல்பிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டது.
எனக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது என்று பதினைந்து நாட்களுக்கு முன் அவர்களிடம் சொன்னபோது அப்படி உற்சாகம் இருந்தது அவர்களின் குரலில் . சீக்கிரம் வந்து பார்க்கிறேன் என்று சொன்னார் . ஒருவேளை அவரேதான் என் மகளோ ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக