செவ்வாய், ஆகஸ்ட் 17, 2010

முகம் காணல்

நிறைந்து வழியும்
என் காதல்...
காணாத காட்டில்
ஓடையாய் நடக்கிறது!

எப்போது நடக்கும்
உன் முகம் காண்பது?

எந்தத்தடயமும்
விட்டுப்போவதில்லை  -
உன்னைக்கண்டுபிடிக்க!

இருந்தாலும் பயமாய்
இருக்கிறது நீ
என்னை நெருங்கிவிட்டாய் என்று!

முகம் பார்க்காமல்
எப்படி முற்றுப்பெறும்
இந்தத்திருவிழா?

இன்றாவது ஒரு
அடையாளம்  என்னிடம்
விட்டுவிட்டுப்போ! அல்லது
கடந்த ஜென்மத்தின் ஒரு
அறிகுறியாவது சொல்லிவிட்டுப்போ!

எப்படியும் நீ - நான்
பார்த்த ஞாபகமாய்
இருக்கப்போகிறாய்!

இன்னும் பீடிகை 
எதற்கு - உன்
கை விரல்  நகம் பட்டாலும்
சொல்லிவிடுவேன் நீ யாரென்று!

என் பாத்திரம்
நிரம்பி வழிகிறது - ஏதோ ஒரு
உருவத்தை நான் தேர்ந்தெடுக்குமுன்
எப்படியும் நடந்து விட வேண்டும்
உன் முகம் காண்பது!

பாதை இருந்தால்
பயணம் தொடரலாம் -
காடு தான் என்றால்
உயிருருகி தேடலாம்!
அதுவா இதுவா
இடதா வலதா என்றால்
முடிவில்லாமல் தொடரும்
இந்த முகம் காணும் படலம்!

என்னருகில் இருப்பதாய்
ஒரு நினைவு - இல்லை
எங்கோ இருப்பதாய்
இன்னொரு கனவு!

கனவுக்கும் நினைவுக்கும் - உன்னை
நுகரும் சக்தியில்லை!

இங்கேதான் இருக்கிறாய்
இந்தக்கூட்டத்தில்தான் நிற்கிறாய்!
இருந்தும் உன்னை
அடையாளம் தெரியவில்லை!


போதும் போ - என் உயிரொழுகி
முடிவதற்குள் உன்
முகம் காணல் நடந்து விடும்-
எப்படி என்கிறாயா?

நான் மனிதன் -
எனக்குத்தான் தெரியவில்லை
உனக்குக்கூடவா தெரியாது - என்
உயிர் உருகும் வாசனை?

கருத்துகள் இல்லை:

வலைப்பதிவு காப்பகம்